RSS Feed

காதலில் சொதப்புவது எப்படி?

February 23, 2012 by Suraj

நாளைய இயக்குனர் என்று கலைஞர் தொலைக்காட்சியால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் பாலாஜி மோகன். அவர் வெள்ளித்திரையில் இயக்கி வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம் “காதலில் சொதப்புவது எப்படி?”. இதே பெயரில் இவர் எடுத்த குறும்படம் பலத்த வரவேற்பைப் பெற்றதுமல்லாமல் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அந்த வெற்றி உற்சாகத்துடன் அதை அப்படியே முழு நீளத் திரைப்படமாக எடுத்துவிட்டார். இதற்கு முன் குறும்பட இயக்குனர்கள் சிலர் வெள்ளித்திரையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு குறும்படம் திரைப்படமாக மாறியிருப்பது இதுவே முதல் முறை. இந்த புது யுத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.



தமிழ் சினிமா வரலாற்றில் நாம் இதுவரை பல தடைகளை மீறி காதலில் வெற்றி பெற தவிக்கும் ஜோடிகளின் கதையைத் தான் பார்த்திருக்கிறோம். அவற்றில் இருந்து மாறுபட்டு முதல் முறையாக இந்த திரைப்படத்தில் காதலில் சொதப்பும் ஜோடியின் கதையை திரையில் பார்க்கலாம். படத்தின் முதல் காட்சியிலேயே நாயகன் சித்தார்த்தும் நாயகி அமலா பாலும் பிரிந்து விடுகிறார்கள். கடைசி காட்சியில் தான் மீண்டும் சேர்கிறார்கள். நடுவில் நடுக்கும் கலாட்டா களேபரம் தான் கதை! இயக்குனர் தனது ஒரு குறும்படத்தின் பெயரை இந்த படத்துக்கு பெயராக வைத்து விட்டாலும் தனது மற்றுமொரு குறும்படமான மிட்டாய் வீட்டின் கதையையும் படத்தில் உபயோகப்படுதியிருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் இது ஏதோ தனது நண்பர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் போன்றோ அல்லது ஏன் தனது சொந்த வாழ்கையிலேயே நடந்த நிகழ்வைப் போன்றே இருப்பதாகக் கூடத் தோன்றும் அவ்வளவு ஆழமாக ஒரு சராசரி கல்லூரி மாணவனின் வாழ்கையை பிரதிபலிக்கிறது இத்திரைப்படம். மேலும் படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் நமது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறார்கள். இது படத்தின் மிகப் பெரிய பலம் என்றும் சொல்லலாம்.

இயக்குனர் படத்தில் பெரும்பாலான இடங்களில் on screen narration முறையைக் கையாண்டிருக்கிறார். இதுவரை குறும்படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இம்முறையை தமிழ் திரையுலகத்திற்கு இறக்குமதி செய்திருக்கிறார். இது கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். படத்தின் கதையோட்டத்திர்கு சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அர்ஜுன் (சிவா) மற்றும் விக்னேஷ் (விக்னேஷ்) மிகவும் உதவியிருக்கிறார்கள். சித்தார்த் facebook இல் பல பெண்களுடன் friend ஆக இருப்பதைப் கண்டு அமலா பால் கோபப்படுவது sms இல் சண்டைப் போட்டுக் கொள்வது போன்ற நிகழ்வுகள் இன்றைய இளம் தலைமுறை காதலர்கள் மத்தியில் நாம் சாதரணமாக காணலாம். இதைப் போன்று நம்மைச் சுற்றி நடக்கும் மிகச் சாதாரணமான விஷயங்களை கூட மிக நுணுக்கமாக திரைக்கதையில் செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

காதலுக்கு வயது ஒரு வரம்பில்லை என்பதற்கு ஏற்றார் போல அமலா பாலின் அம்மாவாக நடித்திருக்கும் சுரேக்கா வாணியையும் அப்பாவாக நடித்திருக்கும் சுரேஷையும் இளையராஜாவின் உதவியுடன் romance செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் மற்றுமொரு highlight சந்தானம் ஸ்டைலில் சித்தார்த்தின் நண்பராக வரும் அர்ஜுன் செய்யும் timing comedy. “நாங்க ஏற்கனவே boy friends வச்சிருக்கோம்” என்று சொல்லும் பெண்ணைப் பார்த்து, “என்னங்க எதோ நாய் குட்டி வச்சிருக்கிற மாதிரி சொல்லுறீங்க?” என்று அப்பாவித்தனமாக கேட்கும் போதும், சண்டை போடும் காதலர்களிடம் finger on your lips என்று சொல்லி கிண்டலடிக்கும் போதும், பேசும் பெண்களிடம் எல்லாம் அறை வாங்கும் போதும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். பார்வதி பார்வதி  பாடலைத் தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. ஏனைய பாடல்கள் அனைத்தும் படத்தை இரண்டு மணி நேரம் இழுக்கவே உதவியிருக்கின்றன. நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் பாடல்களை படமாக்கிய விதமும் ரசிகர்களுக்கு பாடல்கள் எரிச்சலூட்டாதவாறு பார்த்துக்கொள்கின்றன. இருபது நிமிட படத்தை இரண்டு மணி நேரப் படமாக எடுப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்படுவதை தவிர்க்கயிலவில்லை.”ஆண்களால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சும்மாவே இருக்க முடியும், ஆனால் பெண்களால் ஐந்து நிமிடங்கள் கூட எதைப் பற்றியாவது யோசிக்காமல் இருக்க முடியாது “, போன்ற வசனங்களிலும் பெண்களின் கண்ணீரை   secret weapon என்று  கிண்டலடிப்பதிலும் பளிச்சென தெரிகிறார் இயக்குனர். ஷ்யாம்-பூஜா காதல் கதை படத்துடன் ஒன்றாதது போல் தோன்றினாலும் கதைக்கு மிகவும் அவசியமாகிறது. சுரேஷ்-சுரேகா வாணி இடையே காண்பிக்கப்படும் காதல் காட்சிகள் இளைஞர்களை மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களையும் கவரும் வண்ணம் படமாக்கியிருக்கிறார் பாலாஜி.

Stephen Speilberg பாணியிலான Title card இல் இருந்து படத்தின் இறுதியில் வரும் சிறிய cameo தோற்றம் வரை படம் நெடுக தனது முத்திரையை திரையில் பதித்ததுமட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தில் பலரது கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்திருக்கிறார் பாலாஜி. அவர் இதுவரை எத்தனை முறை காதலில் சொதப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக இந்த முறை சொதப்பவில்லை. காதலில் சொதப்புவது எப்படி மூலமாக தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.

[rating:1]


1 Comment »

  1. […] “காதலில் சொதப்புவது எப்படி?“( (KSY) : குறும்படத்தை திரைப்படமாக்குவது இப்படி… […]

Leave a Reply

Your email address will not be published.